|
நான் ஒரு எழுத்தாளனாக களம் கண்ட பிறகு என்னை மிகவும் பாதித்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் கயர்லாஞ்சி கிராமத்தில் நடந்த வன்கொடுமைகள். ஒரு தலித் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அந்தக் கிராமமே திரண்டு கொன்ற கொடூரக் காட்சிகள் என் கண்களில் இருந்து இன்றும் அகல மறுக்கிறது. ஹிந்து மதத்தின் தீண்டாமையைச் சகிக்க முடியாமல் அதில் இருந்து வெளியேறி பௌத்த மதத்தில் இணைபவர்களைத் திட்டமிட்டுக் கொலை செய்வது மகாராஷ்டிரத்தில் வழக்கமாக உள்ளது. அதைப் பற்றிய என் கட்டுரை ‘உயிர்மை’ இதழில் டிசம்பர் 2006ல் வெளியானது. ஜோதிபா புலே, அம்பேத்கர் முதல் நாம் இன்று அறியும் தலித் அரசியல், தலித் இலக்கியம் என அனைத்தையும் இந்தியாவிற்கு வழங்கியது மகாராஷ்டிரா மாநிலம். இந்தப் பின்புலங்களில் அந்த மாநிலத்தில் உள்ள தலித்களின் நிலையை அறியும் ஆவல் ஏற்பட்டது. நானும் என் நண்பர் சஹானா முகர்ஜி அவர்களும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருபது நாட்கள் பயணம் மேற்கொண்டோம். ஜம்கேத், கரன்ஜாலா, சிண்டி,கட்கீ, பட்ரி, மூஞ்சி, கையர்லாஞ்சி, ஹிங்கோலி, சிவ்ரி என 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று தகவல்கள் சேகரித்தோம்.
இந்தப் பயணங்களில்தான் நாங்கள் பூனேயில் இருந்து 87 கி.மீ. தொலைவில் இருந்த ரலேகான் சித்தி வழியாகச் சென்றோம். அந்தக் கிராமத்தில் நாங்கள் சில மணி நேரம் செலவழித்தோம், ஆனால் அது பின்னால் இத்தனை முக்கியத்துவமாக மாறும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. இந்தச் சுற்றுப்பயணங்களின்போது எல்லா கிராமங்களிலும் நான் ஊருக்குள் நுழையும் இடத்திலேயே இறங்கி மெல்ல நடந்து மக்களைச் சந்தித்துப் பேசுவது வழக்கம், நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 14 ஆண்டுகள் வசித்தவன் என்பதால் மராத்தி மொழியை அறிவேன். இந்தியக் கிராமங்கள் அனைத்தும் ஊரும் சேரியுமாகப் பிரிந்து கிடக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சேரிகளுக்குச் சென்றால் அங்கு ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் சொல்ல மக்களிடம் ஆயிரம் துயரக்கதைகள் மனங்களில் குமுறிக்கிடக்கும்.
அன்னா ஹசாரேயின் சாதனை என இன்று ஊடகங்கள் போற்றும் ரலேகான் சித்தி கிராமத்தில் அவர் களம் கண்ட பிறகு விவசாயத்தில் பல மாற்றங்கள் கொணர்ந்துள்ளார். வானம் பார்த்த பூமியைப் பசுமையாக மாற்றியுள்ளார். ஆனால் அந்தக் கிராமத்தில் அவர் செலுத்தும் அதிகாரம் எத்தகையது என்பதுதான் கேள்விக்குறியே.
அந்தக் கிராமத்தில் யாரும் புகைபிடிக்க இயலாது. புகையிலை சிகரெட் என எந்தப் பொருளும் அங்குள்ள கடைகளில் விற்பனை செய்யவே தடை உள்ளது. அந்தக் கிராமத்தில் கேபிள் டி.வி. கிடையாது, அந்தக் கிராம எல்லைக்குள் சினிமா போஸ்டர்கள் கூட ஒட்ட முடியாது. நீங்கள் உங்கள் வீட்டு விசேஷங்களில் கூட சினிமா பாடல்கள் போட இயலாது. ஆனால் துகாராம், கியானேஷ்வர், ஷிர்டி சாய்பாபா போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளாக வெளிவந்துள்ள திரைப்படங்களை மட்டுமே அங்கு போடலாம். டிஷ் டி.வி.யின் வருகைக்குப் பிறகு அதனைக் கிராமத்தில் அனுமதி பெறாமல் ஒரு குடும்பம் வாங்கிப் பொருத்தியது. அந்தக் குடும்பத்தை அன்னா ஹசாரே தானே கண்டித்து, தண்டனை வழங்கியது சமீபத்திய செய்தி.
அந்தக் கிராமத்தில் கட்சிக் கொடிக்கம்பங்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கள் என அனைத்திற்கும் தடை. அந்தக் கிராமத்தில் கடந்த 24 ஆண்டுகளாகப் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டதில்லை. அன்னா ஹசாரேயின் விரல் காட்டும் திசையைப் பதவி அலங்கரிக்கும். சட்டசபை, பாராளுமன்றத் தேர்தல்களின் பொழுதுகூட அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் இந்தக் கிராமத்தை எட்ட முடியாது.
அங்குள்ள ஹிந்துக்கள் என்றால் அவர்கள் மராத்தாக்கள் மட்டுமே. அதில் தலித்துக்களான சமார்கள், மகர்கள் சேர்த்தியில்லை. இது அங்குள்ள தலித்துகளை மிகவும் கேவலமாக உணரச்செய்கிறது. இந்தக் கிராமத்திற்கு சேவை செய்வதுதான் எங்கள் பணி. எங்களுக்கு இங்கு சம அந்தஸ்து எல்லாம் கிடையாது என பலர் குமுறினார்கள். ஏதோ கடவுள் விட்டபடி என அவர்கள் நொந்து கொண்டார்கள்.
அந்தக் கிராமத்தில் யாரும் மது அருந்த இயலாது. அப்படி அருந்துபவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் பழக்கம் அங்கு உள்ளது. அந்தக் கிராமத்தில் மட்டன் சிக்கன் எல்லாம் பூரணத் தடை. அதை மீறி இறைச்சி உண்ணுபவர்களைக் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் பழக்கம் உள்ளது. அந்தக் கம்பங்களில் சில நேரம் இரவெல்லாம் கட்டிவைத்து விடுவார்களாம். முன்பு அன்னாவே தன் மிலிட்டரி பெல்டால்தான் அடிப்பாராம். ஆனால் இப்பொழுது இந்த மாதிரியான தண்டனைகளை வழங்கும் அதிகாரத்தை அன்னா ஹசாரே அந்தக் கிராமத்தை சேர்ந்த 25 இளைஞர்கள் வசம் ஒப்படைத்துள்ளார். நம் காவல் துறைக்கே இந்த ஷூட் அட் சைட் போன்ற அதிகாரங்கள் கிடையாது, தண்டனை வழங்கும் உரிமை நீதிமன்றத்திற்கே உள்ளது.
இது கூடப் பரவாயில்லை. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் கூட இதே போன்று பல கட்டுப்பாடுகள், தண்டனைகள் விதித்து நடைமுறைப்படுத்தியுள்ளார் அன்னா. கட்டுப்பாடும், தண்டனையும் ஒரு சமூகத்தில் அமைதியை, ஒற்றுமையைக் காக்க மிகவும் அவசியம் என்பது அன்னாவின் தத்துவம் (இதை எல்லாம் பார்க்கும்பொழுது தமிழ் நடிகர் நம்பியாரின் ஞாபகமாகவே உள்ளது).
இந்தக் கிராமத்தில் ஜனநாயகம், மனித உரிமைகள் என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் நிலைதான் உள்ளது. பொருளாதார மேம்பாடு மட்டும் ஒரு மனிதனை,குடும்பத்தை, வாழ்வியல் அனுபவத்தை முழுமை பெறச் செய்யாது. ஒரு மனிதன் தன் சுதந்திரத்தை உணர வேண்டும், தன் உரிமைகளை அனுபவிக்க வேண்டும்என்பதற்காக இங்கு அனைவரும் பல வழிகளில் அதனை சாத்தியப்படுத்த முனைந்து வரும் நேரம், இந்தியாவின் ஒரு கிராமத்தை அன்னா ஹசாரேநிலப்பிரபுத்துவத்திற்கும் அதற்குப் பிந்தைய காலங்களுக்கும் டைம் மெஷினில் அழைத்துச் செல்வது போலவே உள்ளது.
ஊடகங்கள் நினைத்தால் ஒரு மனிதரை நொடிப் பொழுதில் உருவாக்கலாம் என்பதுதான் ராம்லீலா அனுபவம் நமக்கு உணர்த்துகிறது. இது தேசத்தில் இருக்கும் எல்லா கேமிராக்களும் குவிமையமாக அந்த மைதானத்தில் இருந்த பொழுது தோன்றியது. அவர்கள் உருவாக்க நினைப்பது அவர்களது உரிமை என்றால் நாம் நம் laterel thinking ஐக் கொஞ்சம் உஷாராக்கிவிடவில்லை என்றால் நம்மையும் சவாரிக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்பது மீண்டும் ஒரு முறை தெளிவாகியுள்ளது.
கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம் என்றால் ‘நீங்கள் எங்களுடன் இல்லை என்றால் நீங்கள் ஊழலை ஆதரிப்பவர்’ என்று பலர் கர்ஜிப்பது கேட்கிறது. உடன் கொஞ்சம் ரீவைண்டு செய்தால் "நீங்கள் எங்களுடன் இல்லை என்றால் நீங்கள் தீவிரவாதத்தை ஆதிரிக்கிறீர்கள்" என்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். இன்னும் கொஞ்சம் பார்வர்டு செய்தால் "நீங்கள் எங்களுடன் இல்லை என்றால் நீங்கள் மாவோயிஸ்டுகளுடன் இருக்கிறீர்கள்" என்கிற மத்திய அரசின் குரலும் சேர்ந்து கேட்கிறது. ஒரு பன்மையான சமூகத்தில் இரு கருத்துகள் மட்டும் நிலவச் செய்வதுதான் மிக பெரும் ஆபத்து. பல கருத்துகள் இருக்கலாம். ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கலாம். பின் அனைவரும் ஒரு முடிவை எட்டுவது தான் ஜனநாயக முறை. எல்லாவற்றையும் ஒற்றைப்படையில் மாற்றுவது சர்வாதிகாரத்திற்கே இட்டுச்செல்லும் என்பது வரலாறு.
மகாராஷ்டிர தலைமை தகவல் அறியும் உரிமை சட்ட அதிகாரியின் நியமனத்தில் முறைகேடு நடந்ததைக் கண்டித்து ரலேகான் சித்திக்குச் சென்று அன்னா ஹசாரேயின் ஆசிரமத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் கிருஷ்ண ராஜ் ராவ். அவரைக் காவல்துறையை வைத்து உடன் அப்புறப்படுத்தினார் ஹசாரே. இந்த ஊரில் அவரைத் தவிர யாரும் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்பது கிராமக் கட்டுப்பாடாம். அன்று இரவு அவருக்கு எங்கும் தங்க அனுமதிக்கவில்லை. அருகில் உள்ள பார்நரில் கூட விடுதிகளில் இடம் தர மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் அன்றைய இரவை அங்கிருந்த காவல் நிலையத்தில் கழித்துவிட்டு மும்பை சென்று அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதைத் தான் ஒரு சிறிய சர்வாதிகார முயற்சி என்று மேலே குறிப்பிட்டேன்.
அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மகாராஷ்டிரத்தின் 20 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது, அதில் உள்ள 13 மாவட்டப் பொறுப்பாளர்கள் கடும் குற்றப்பின்னணி உடையவர்கள். நிவ்ருத் ஜக்தப், பரசரந்து, பி.டி.பாட்டீல், ஹேமந்த்சந்திர கலே, சஞ்சய் சுர்னே என நீளும் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் ஊர்களில் தொழில் செய்பவர்களிடம் பணம் பறிப்பது எல்லைகளை எல்லாம் கடந்தது. அந்த சமயம் அன்னா ஹசாரே நடத்தும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது முறைகேடு, பணப் பறிப்பு, நில அபகரிப்பு என பல புகார்கள் ஏராளமாக எழுந்ததைத் தொடர்ந்து 2003 செப்டம்பரில் நீதிபதி சாவந்த் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை 2005 பிப்ரவரியில் வெளியானது. 379 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பு மிக விரிவாக அன்னாவின் நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பது முதல் ஒரு எளிய காந்தியவாதி எத்தனை லட்சங்களைக் கொண்டு தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் என்பது வரை விவரித்துச் செல்கிறது. உலகெங்கும் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்களின் 288 மணி நேர தொடர் நேரடி ஒளிபரப்புகளில் எங்கும் அவரது கடந்த காலங்கள் பற்றிப் பேசப்படவேயில்லை என்பது இன்றைய ஊடகங்களின் மறைமுக அரசியலை நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் ‘விஜய்’ தொலைக்காட்சி ‘நீயா நானா’ லோக்பால் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் என்னிடம் இந்தத் தீர்ப்பைக் கேட்டுப் பெற்றது நம்பிக்கை அளிக்கிறது.
டப்பாவாலாக்கள் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக ஆகஸ்டு 19 அன்று வேலை நிறுத்தம் என்று பெரும் கொண்டாட்டங்கள். 120 ஆண்டுகளில் முதல் முறையாக வேலை நிறுத்தம் என்ற பெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்கள் சிலர். அன்று மகாராஷ்டிரத்தில் விடுமுறை தினம், பார்சிகளின் புத்தாண்டான படேடீ அன்று கொண்டாடப்படுகிறது. மத்திய வங்கிகள் முதல் எல்லா நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை. தலையே சுற்றுகிறது. இந்த 288 மணி நேர நேரடி ஒளிபரப்பிலும் அவர்கள் செய்திகளை உற்பத்தி செய்யவே முற்பட்டார்கள். புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். இதற்கு வாடகைக்குப் பல எழுத்தாளர்களை அமர்த்தினார்கள், பேச்சாளர்களைத் தயார் செய்தார்கள். சில தயாரிப்பாளர்கள் தங்களின் கறுப்புப் பணத்தில் அன்னா ஹசாரேயை வைத்து அடுத்த திரைப்படம் எடுக்க டிஸ்கஷனில் களமிறங்கினார்கள். ஒரு எழுத்தாளர் அவர்கள் அழைக்கும் முன்பே ‘சூப்பர் மேன் அன்னா’ படத்திற்கு வசனத்தை எழுதி முடித்துவிட்டார்.
இதே ராம்லீலா மைதானத்தில்தான் 1975ல் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்குப் பின்னால் இளைஞர்கள் திரண்டார்கள், அவர்களுக்கு இருந்த அரசியல், சமூகத் தெளிவிற்கும் இன்று வெளுத்துப் போன டீ ஷர்ட்டுகளுடன் ஒரு எளிய மேக்கப்பில் வீதிக்கு வந்த மத்தியதர விடலைகளுக்கும் பெரும் பள்ளத்தாக்கான வேறுபாடுகள் உள்ளன. இவர்களில் பலரிடம் சென்று பத்திரிகையாளர்கள் ஜெ.பி. யை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டதற்கு பலரின் பதில் "எது, ஜெபி மார்கன். அந்த கார்ப்பரேட் கம்பெனியா" என்றார்கள்.
இன்று திரண்டதாக மார்தட்டிக் கொள்ளும் இந்த மத்திய தர வர்க்கம்தான் கடந்த 20 ஆண்டுகளில் உலகமயத்தின் வழியாக வந்த மொத்த செழிப்பை அனுபவித்த கூட்டம். இந்தியா முழுவதும் லஞ்சத்தின் விலையை உயர்த்தியதே இந்த வர்க்கம்தான். சாதாரணமாக ஒரு ரேஷன் கார்டைக் கொடுக்க ஒரு குமாஸ்தா டீ செலவுக்குக் கொடுத்துட்டுப் போம்மா என்றிருந்ததை மத்தியதரவர்க்கம்தான் 1000களுக்கு இட்டுச் சென்றது. எங்களால் எங்கும் நேரில் வர இயலாது, எங்களுக்கு லாஸ் ஆ ஃப் பே ஆகிவிடும் என சொல்லியே தங்களின் பிரதிநிதிகளை அனுப்புகிறோம் என்று அந்தக் காரியங்களை விரைவில் முடிக்க தங்களின் ரூபாய்த் தாள்களை அள்ளி வீசிய வர்க்கம்தான் இந்த மத்திய தர வர்க்கம். அரசு செலவில் படித்துவிட்டு இந்த நாட்டிற்கு மிகப் பெரும் ஙிக்ஷீணீவீஸீ ஞிக்ஷீணீவீஸீஐ ஏற்படுத்தியது இந்த சமூகம்தான். கண்மூடித்தனமாக இவர்களின் நுகர்வு கலாச்சாரம்தான் இன்று கார்ப்பரேட்டுகள் பழங்குடிகளைக் காடுகளில் இருந்து அப்புறப்படுத்தக் காரணம். இந்த மத்திய தர வர்க்கம் திசை அறியாது முச்சந்தியில் நிற்கிறது. அவர்களின் குற்ற உணர்விற்கு ஒரு வடிகாலாக அமைந்து விட்டார் அன்னா ஹசாரே.
ஆனால் இன்று நீங்கள் புதிய விளம்பரம் கொடுத்து "Mr.XYZ" ஆடிட்டரை நாடினால் வரியே கட்ட வேண்டியது இல்லை என்று விளம்பரம் கொடுத்தால் ராம் லீலாவை விட அதிக கூட்டம் அடுத்த நாள் காலை அங்கு கூடிவிடும் இந்த மெழுகுவர்த்தி கூட்டம். இதுதான் 1975க்கும் 2011க்கும் உள்ள வித்தியாசம்.
அரவிந்த கேஜ்ரிவால், கிரண் பேடி என இந்தக் குழுவின் பலரைப் பற்றி ஏராளமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.வெளிநாடுகளில் இருந்து இவர்கள் பெற்று வருகிற லட்சக்கணக்கான டாலர் பற்றிய செய்திகள் குவிந்தவண்ணம் உள்ளன. அரவிந்த கேஜ்ரிவால் தனது தொண்டு நிறுவனத்தைத் தான் பணி செய்த தகவல் உரிமை பெறும் சட்டத்திற்குள் கொண்டுவர மறுக்கிறார். கிரண் பேடியின் மீது இந்திய நாட்டின் ரகசிய காப்பை மீறிய புகார்கள் உள்ளன. ராம்தேவின் ஸ்காட்லாந்து தீவில்தான் லோக் பால் அலுவலகம் அமைக்கப்படுமா? திடீரென ஊழலை எதிர்க்க கிளம்பிய இந்தக் கைகள் முழுக்க கறைபடிந்துள்ளது. இவர்கள் ஊடகங்களை வைத்துக் கொண்டு போடும் ஆட்டத்தில் பல கட்டங்கள் இட்டு நிரப்பப்படாமல் உள்ளது. பிரதமரை, நீதித்துறையை விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர துடிக்கும் இவர்கள் இந்த இயக்கங்களுக்குப் பணம் வழங்கும் தொண்டு நிறுவனங்களையும், கார்ப்பரேட் ஊடகங்களையும் ஜன் லோக் பால் வசதியாக வெளியே நிறுத்தி விடுகிறது.
ஜந்தர் மந்தர் உண்ணாவிரதத்தில் அண்ணா ஹசாரேயின் முதுகுக்குப் பின்னால் மகாத்மா காந்தியைக் கொன்ற இயக்கத்தின் பதாகையான பாரத மாதா இருந்தது. ஆனால் இது சில மாதங்களில் ராம்லீலா மைதானத்துக்கு வரும் முன் அது மகாத்மா காந்தியாகவே உருமாறியது. எப்படி இத்தனை பெரிய பள்ளத்தாக்கை இவர்கள் இத்தனை சுலபமாக கடக்கிறார்கள். மக்களின் மறதியை மூலதனமாகக் கொண்டும் தொழில் செய்கிறார்கள். இவர்களின் ஜன் லோக் பால் மீதும், போராட்ட முறை மீதும் கேள்விகள் பல அரும்பிய வண்ணம் உள்ளன!
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முழுக்க முழுக்கத் திட்டமிட்டு நடத்தியது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ. கட்சியை 2014ல் மீண்டும் ஆட்சியில் அமரவைக்க பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதில் இந்த ஊழல் எதிர்ப்பு அவர்களின் துருப்புச் சீட்டுகளில் ஒன்று. இந்த ஆட்டத்திற்குத் தான் அவர்கள் தங்கள் பட்டியலில் உள்ள அன்னா ஹசாரேயையும் ராம்தேவையும் தேர்வு செய்கிறார்கள். அன்னா ஹசாரேயின் கிராமம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைகள்படி ஒரு சாதிய கிராமமாகச் செயல்படுகிறது. அதனைப் பார்த்துப் பெருமை பொங்க முதலில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆங்கில் ஏடான ‘ஆர்கனைஸ’ரில் ஏராளமான கட்டுரைகள் எழுதி தங்களின் உறுப்பினர்களுக்கு அவரை ஏற்கும் பக்குவம் வரச் செய்தார்கள். 1987 பிப்ரவரி 2 யில் ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் சேஷாத்ரி "ராமராஜ்ஜியத்தை நினைவுபடுத்தும் கிராமம்" என்று கட்டுரை எழுதினார். அடுத்த 1987 பிப்ரவரி 15ல் "ரலேகான் சித்தி சமூக மாற்றத்திற்கு ஒரு புதிய பெயர்" என்று எப்படி ஒரு கோவில் கிராமத்தின் செயல்பாடுகளின் மையமாக திகழ்கிறது என எழுதினார். அதன் அடுத்த மார்ச்ச 1987ல் "நடவடிக்கையில் ஒரு கர்ம யோகி" என்று அண்ணாவை புகழ்ந்து தனது அடுத்த கட்டுரையை எழுதினார்.
அதனைத் தொடர்ந்து அவரைப் பற்றி ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் இந்தியா முழுவதும் பேசுகிறார்கள். இந்த வழிகளில்தான் தனக்கு அன்னாவை தெரியும் என நரேந்திர மோடி பேட்டி ஒன்றில் கூறுகிறார். விஸ்வ ஹிந்து பரிக்ஷத் மற்றும் பா.ஜ.க.வின் மாணவர்கள் அமைப்புதான் இந்தப் போராட்டங்களுக்கான மொத்தம் ஏற்பாடு செய்தது. ராம் தேவ் மற்றும் ஹிந்து நிறுவனங்களுக்குச் சொந்தமான தில்லியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்டபங்கள், ஆசிரமங்களில்தான் வந்தவர்களுக்கு இலவசமாகத் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. உணவுப் பொட்டலங்கள், மருத்துவம் எல்லாம் இந்த அமைப்புகளின் ஏற்பாடே. இந்த ஏற்பாடுகளை நெறிப்படுத்த லேப்டாப்களுடன்எம்.பி.ஏ. படித்த கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் பல குழுக்களாக ஏசி கார்களில் தில்லியை வலம் வந்தார்கள். ராம் லீலா மைதான மேடையின் பின்புறம் அமைக்கப்பட்ட அறையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூன்று தலைவர்கள் மொத்தம் 288 மணி நேரமும் முகாமிட்டிருந்தனர்.
சுதந்திர இந்தியாவில் இத்தனை வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் கார்ப்பரேட் போராட்டம் இதுவே. அன்னாவைப் பரிசோதிக்க அரசு மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லை, இந்தியாவின் மிக விலை உயர்ந்த மருத்துவரான நரேஷ் த்ரேஹன் அமர்த்தப்பட்டார். கோடிகள், பன்னாட்டு நிறுவனங்கள், ஃபோர்ட் பவுன்டேஷன் அளித்த லட்சம் டாலர், கார்ப்பரேட் மீடியாக்களின் ஒளி வெள்ளத்தில் நடந்த ஒரு அக்மார்க் காந்தியப் போராட்டம்.
ஊழலை ஒழிக்க முதலில் நமக்கு சமூக மனிதன் என்னும் பொறுப்புதான் அவசியமாகத் தேவைப்படுகிறது. ஒரே நாளில் சட்டம் இயற்றி இனி எல்லோரும் நல்லவர்களாக மாறிவிடலாம் என்பது போல்தான் உள்ளது இன்றைய டூ மினிட் நூடுல்ஸ் கலாச்சாரம்.
என் பதிவு திருமணத்திற்குச் சென்றோம். காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று நாங்கள் அன்று மாலை 4 மணிக்குத் தான் திரும்பினோம். லஞ்சம் கொடுக்க மறுத்ததால் எங்கள் பதிவு காலதாமதம் ஆனது. அன்று பல முறை எங்களைக் குமாஸ்தாக்களை வைத்து பேரம் பேசினார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று10க்கும் மேற்பட்ட பதிவுகள் அதிரடி வேகத்தில் முடிந்தன. மெல்ல விசாரித்தபோது சாதாரன பதிவு என்றால் ஒரு ரெண்டாயிரம்தான் வாங்குவோம். இன்னிக்கி வந்தவங்க எல்லாம் அமெரிக்காவுல வேலை செய்யும் இந்தியர்கள். அவங்களால இங்க காத்திருக்க முடியாதுனு பதிவுக்குப் பத்தாயிரம் குடுத்தாங்க. அப்புறம் என்ன, எங்க அய்யா அவங்கள நிக்க வெக்க கூடாதுன்னுட்டாரு என்றார். லஞ்சத்தின் ரேட்டை இப்படித்தான் கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய மத்தியதர வர்க்கமும், வெளிநாட்டு இந்தியர்களும், கார்ப்பரேட்டுகளும் வானுயர உயர்த்தினார்கள். இவர்கள்தான் தங்களை ஒரு சூப்பர் பிரஜைகளாக சதா நினைத்து உயிர் வாழ்கிறார்கள்.
இவர்களின் பேராசைகள் அடங்காதவரை எந்த சட்டத்தை இயற்றினாலும் இங்கு லஞ்சத்தை ஒழிக்க இயலாது. அருணா ராய் மற்றும் பகுஜன் அமைப்புகளும் வெளியிட்ட லோக் பால் மசோதாதான் செயல் சாத்தியம் உடையவையாக இருந்தன (இந்த மசோதாக்களை ஒப்பிட்டு இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் பேசலாம்). அரசின் லோக் பால் பல் இல்லாத பாம்பாகவும், அன்னாவின் லோக் பால் ஊரில் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் சுமந்து நிற்கும் ஹிந்துமதக் கடவுளாக ஜனநாயகத்தின் அடிப்டை உரிமைகளை நசுக்கும் பேராற்றலுடன் காட்சியளித்தது.
உண்மையான காந்திய வழியில் இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள இடிந்தகரையில் நடந்து வரும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மக்கள் போராட்டத்தைப் பாருங்கள். 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம், தினமும் 25,000 பேர் அவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம். குழந்தைகள் பள்ளிகளைப் புறக்கணித்துப் போராட்டம். இந்த127 பேர் தாங்கள் சாக நேர்ந்தால் ஒரே சவப் பெட்டியில் அல்லது குழியில் வைத்து அடக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாதிகளைக் கடந்து தங்களின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், இந்த தேசத்து மக்களை ஒரு பேராபத்தில் இருந்து மீட்கவும் ஒரு மக்கள் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் அங்கே கார்ப்பரேட்டுகள் இல்லை, வெளிநாட்டுப் பணம் இல்லை, அடிப்படை ஏற்பாடுகள் கூட இல்லை. தமிழக அரசு போக்குவரத்தைக் கூட நிறுத்திவிட்டது. எந்தவித கவர்ச்சியும் இல்லாததால் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பும் இல்லை.